Sunday 10 June 2012

"ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில் ஆட்டோமேடிக் தோசை மெஷின்


பெங்களூரு :இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தாவில், மின்னல் வேகத்தில் இட்லி, தோசை தயார் செய்யும், "ஆட்டோமேடிக்' மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்ய முடியும்.

மைசூரை மையமாகக் கொண்ட மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தில், பல்வேறு உணவு தயார் செய்யும் மெஷின்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த, எஸ்.கே., என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்யும் மெஷின்களை தயாரித்துள்ளனர்.

மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மைய அலுவலர்கள், இந்திய ராணுவ அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, இம்மெஷின்கள் குறித்து விளக்கியதில், ரஷ்யாவில் தயாரான, விமானங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்திய கடற்படை கப்பலான, "ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில், இட்லி, தோசை மெஷின் பொருத்த அனுமதி கிடைத்தது.
பெங்களூரு தொம்மலூருவிலுள்ள, "எஸ்.கே., என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள், விக்ரமாதித்தா கப்பலுக்கு சென்று, ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்யும் மெஷின்களை பொருத்தியுள்ளனர்.

எஸ்.கே., என்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கடந்த 2000ம் ஆண்டில், மைசூரு மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தினர், தோசை தயாரிக்கும் மெஷின் தயார் செய்ய முடியுமா எனக் கேட்டு, அதற்கான உரிமையையும் வழங்கினர். 2001ல் தயாரித்தோம். ஆனால், சரியாக வரவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு பின், மெஷின் தயாரானது.இம்மெஷினில் தேவையான சைஸ், பருமன் போன்றவற்றை அட்ஜஸ் செய்து வைத்துக்கொள்ளலாம். மாவை கரைத்து, மேல் பகுதியிலுள்ள துவாரம் வழியாக விட வேண்டும். மற்றொரு துவாரத்தின் வழியாக எண்ணெய் விட்டு, நன்கு வேக வைத்தால், "தோசை ரோல்' தயாராகி விடும். இந்த மெஷினை இயக்க ஒரு நபர் இருந்தாலே போதுமானது.இதே போன்று இட்லி மெஷினும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மெஷின் மூலம், ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசைகளை எளிதில் தயார் செய்யலாம். இதற்கு சிறிய அளவிலான இடமே போதுமானது. 
350 கிலோ எடை கொண்ட இம்மெஷின் ஒரு ஹெச்.பி., மோட்டாரில் இயங்கும் திறன் கொண்டது. இதன் விலை, 2.75 லட்சம் ரூபாய்.

ஏற்கனவே, 12 இந்திய கப்பல்களில் இம்மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. முதன் முதலாக இந்திய ராணுவத்துக்கு, "60 தோசை மெஷின்' செய்து கொடுக்கப்பட்டது. இந்தியா வாங்கி புதுப்பித்த, ரஷ்ய கப்பலான, "ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தா'வில், ஆறு தோசை மெஷின், மூன்று இட்லி மெஷின் பொருத்தியுள்ளோம்.இதற்கு மாவு அரைக்க எட்டு கிரைண்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இம்மெஷின்கள் இதற்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்டது. இம்மெஷின்களை பொருத்துவதற்கு 10 நாளானது. இக்கப்பலில், 2,000 பேர் பணியாற்றுவதால், உணவு தயாரிப்பு பணி மிக எளிதாகவும், விரைவாகவும் நடக்கும் என்பதால், இம்மெஷின் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்கப்பல் டிசம்பரில் கர்நாடகா வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:தினமலர் 

மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்?


"தனிக் கல்லில் செதுக்கப்பட்ட குளிகன்: பழநி அருகே மூதேவி கோவில் கண்டுபிடிப்பு' என்ற தினமலர் செய்தி, என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது.இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், "ஜேஷ்டா தேவி' என்று அழைப்பர். "ஜேஷ்டா' என்றால், முதல் என்று பொருள். தமிழில், "சேட்டை' என்று கூறுகின்றனர்.

தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், "ஜேஷ்டா' என்றும் குறிப்பிடுகின்றன, பலவித தாந்த்ரீக புத்தகங்களில் இதைக் காணலாம்.முதலில், தூம்ர வாராஹி என்பவள், சிருஷ்டிக்கு முன்பும், பிரளயத்துக்கு பிறகும், தொடர்ந்து இருப்பவள். "தூம்' என்றால், "புகை' என்று பொருள். பிரளயம் முடிந்த பிறகு, மிஞ்சி நிற்பது என்னவென்றால், புகை மட்டுமே. அவள், புகை மண்டலத்தையே விழுங்கி விட்டவள் என்று பொருளாகும்.
அதைப் போலவே, சிருஷ்டி ஆரம்பிக்கும் முன்பும், அதே புகை தான் முதலில் மேகத்திலிருந்து கிளம்பும். அதனால், முதலில் அவளே தோன்றுவதால், அவள், தேவர்களுக்கும் முன்னால் வந்தவள் என்று கருத்துக் கொள்ளப்படுகிறது. இந்த காரணத்தினால், அவள் முதல் தேவி என்று கருதப்படுகிறாள்.இரண்டாவது கருத்துப்படி, பாற்கடலிலிருந்து, லட்சுமி தேவி மேலே வருவதற்கு முன், இந்த தேவி வந்ததாகவும், அவளை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் என்றும், அதன் காரணமாக அவளை, "தூம்ர காளி' என்று அழைக்கிறார்கள் என்றும் கருதப்படுகிறது. அந்த கோவில், காஷ்மீரில் கவர்னர் மாளிகைக்கு பின்னால், சிறிய குன்றின் மீது உள்ளது.

செல்வம் தருவாள்: ஆழ்வார்களில் ஒருவரான திருத்தொண்டரடி பொடியாழ்வார் காலத்தில், இந்த தேவி, முதல் தேவி என்றும், ஜேஷ்டா தேவி என்றும் கூறி பூஜிக்கப்பட்டாள். 
சமஸ்கிருத சொல்லான ஜேஷ்டா என்பதற்கு, தமிழில், "முதல் தேவி' என்று தான் பொருள். அவளை பூஜித்தவர்களுக்கு, நிறைய செல்வமும், பதவியும், பலவித சவுபாக்கியங்களும் அருளியதாக தெரிகிறது. அந்த கால கட்டத்தில், சமுதாய மக்களின் மனதை, வைஷ்ணவ சமயத்தில் திருப்புவதற்காக, அந்த தேவியை, தமிழில் சேட்டை என்றும், மூதேவியை எதற்கு பூஜை செய்வது, விஷ்ணுவும், நாராயணனும், லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்று கூறி, மெல்ல அவர்களை நாராயண பெருமானின் சேவையில் சேர்த்துக் கொண்டதாகவும், பரவலான கருத்து உள்ளது.

தேவியின் பெயரான முதல் தேவி என்ற சொல், காலப்போக்கில், சொல் திரிந்து, மூதேவியாக மாறிவிட்டது என்று தெரிகிறது. அதற்கு உகந்தது போல, அவள் உருவமும் பெருத்த உடலோடும், பெருத்த வயிறு கொண்டும் செதுக்கப்பட்டு இருக்கிறது.
டில்லி நேஷனல் மியூசியத்தில், ஜேஷ்டா தேவி என்ற பெயருடைய பெரிய சிலை, தமிழ்நாட்டில் இருந்து தான் கொண்டு வரப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது.

எப்படி வர்ணிப்பது?தூமாவதி, அழுக்கு படிந்த உடலோடும், முகத்தோடும், தலையை வாராமல், கோரமாக தலை மயிர் கொண்டவளும், உடம்பு நீளமாகவும், வயிறு ஒட்டியும், கண்கள் இரண்டும் முழுமையாகத் திறந்து கொண்டு, கண்களாலேயே விழுங்கி விடுபவள் போன்றும் காட்சி அளிக்கிறாள்.மிகவும் முக்கியமாக, அவள் இரண்டு கைகளும், முறத்தைப் பிடித்துக் கொண்டு, புடைப்பது போல இருக்கின்றன. சில சமயங்களில், அவள் நின்று கொண்டும் புடைப்பது போல, சிற்பிகள் வடித்துள்ளனர். அவள் சவாரி செய்வது கழுதை மீது. அவளுடைய இடது மேல் கையில், ஒரு கொடி இருக்கும்; அதில், காகத்தின் வரைபடம் உள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடிகள், முறம் பிடித்துக் கொண்டு நிற்கிற அல்லது உட்கார்ந்து கொண்டு இருக்கும் தேவியைத் தான் பூஜை செய்கின்றனர். அவளை, பசி நிறைந்த தேவி என்று கூறி, பூஜை செய்கின்றனர்.

அந்த தேவியின் சிற்பத்தில், அவள் கையில் இருக்கும் முறத்தில், சிறிய சிறிய நெல் விதைகள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நெல் விதைகள், "ஆத்மா' என்றும், அவளை பூஜை செய்யும் ஆத்மாக்கள் சில, சரியான மனப் பக்குவமடையாததாகவும், சில பக்குவப்பட்டதாகவும் இருக்கும். அவள், பக்குவப்படாத ஆத்மாக்களை, கீழே முறத்திலிருந்து தள்ளிவிட்டு, சுத்தமான ஆத்மாக்களை, தன்னோடு சேர்த்துக் கொள்கிறாள்.

கழுதை வாகனம் :கழுதையின் மீது, அத்தனை துணிகளையும் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று, சலவைத் தொழிலாளி துவைக்கிறார். மறுபடியும், அதே கழுதையின் மீது, துவைத்த துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்புகிறார்.அதே மாதிரி தான், தூமாவதி அல்லது ஜேஷ்டா தேவி, பூஜையில் ஈடுபடும் ஆத்மாக்களை, துணி துவைப்பது போல, பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும், சோதனைகளையும் கொடுத்து, மனப் பக்குவப்படுத்துகிறாள்.அதில், அந்த ஆத்மாக்கள் திருந்தி விட்டால், தன் மடியில் எடுத்துக் கொண்டு விடுகிறாள். இந்த காரணத்தினால் தான், சில சில ஆத்மாக்கள், பல ஜென்மங்கள் எடுத்து, அவள் பூஜையை செய்ய முற்படுகின்றன.இன்னும் சொல்லப் போனால், "ஜேஷ்டா' என்கிற தூம்ர வாராஹியை பூஜை செய்ய, பூர்வஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும் என்று, சாஸ்திரம் கூறுகிறது.

காரணம், அந்த ஜேஷ்டா என்கிற தூமாவதி, தூம்ர வாராஹி, தூம்ர காளி என்ற பெயரில், மாயை என்றும், மகா நித்திரை என்றும், காள ராத்திரி, மகா ராத்திரி, மோஹ ராத்திரி என்றும், தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.தூம்ர வாராஹியும், மகா வாராஹியும், ஒரே தேவியின் பெயர்கள். அவர்களின் அம்சங்களும், பணிகளும் வேறு. ஆனால், மூல சார ஸ்வரூபம் ஒன்றே தான். அவள், இரவு நேரம் பூஜிக்கப்படும் தெய்வமாகும். இந்த கருத் தை வைத்துக் கொண்டு தான், ஆழ்வார் அவளை, "மூதேவி' என்று கூறி தள்ளி விட்டாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

காகம்:ஜேஷ்டா அல்லது தூமாவதி என்பவள், வேறு யாரும் இல்லை. அவள் இறந்தவர்களோடு சம்பந்தப்பட்டவள். அவளே யமி ரூபம். அந்த தூமாவதி என்று கூறும் வாராஹியின் கோவில், புவனேஸ்வரில் உள்ளது. அவளுக்கு பெயர் யமி என்று சுவரில் எழுதப்பட்டுள்ளது.தமிழில், சேட்டை என்ற பெயராகும். சேட்டை அல்லது ஜேஷ்டா அல்லது தூம்ர வாராஹி அல்லது மகா வாராஹி ஸ்ரீமன் நாராயணனின் வராஹ அவதாரத்தில், அவருடைய சக்தியாக இருக்கிறாள். அவள் மிகவும் நியாயமான தீர்ப்பை தரும் தர்ம தேவதை.
- முனைவர் ஹரிபிரியா ரங்கராஜன்

நன்றி : தினமலர் 

கலைநயமிக்க அழகிய படைப்புகளை உருவாக்கும் கீழாம்பூர் குடிசை ஆசிரமம்

ஆழ்வார்குறிச்சி:கீழாம்பூரில் கலைநயமிக்க அழகிய படைப்புகளை உருவாக்கும் குடிசை ஆசிரமம் இலவச பயிற்சியை அளித்து பலருக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுப்பதுடன் மட்டுமல்லாமல் அழிந்துவரும் கலைகளையும் உயிர்ப்பித்து வருகிறது.அம்பாசமுத்திரம் தாலுகா கீழாம்பூரில் பாபநாசம் குடிசை ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் அழிந்துபோன.. ஏன் இன்னமும் அழிந்து கொண்டிருக்கிற நமது பண்டைய கலை மற்றும் கலாச்சார வேலைப்பாடுகளை தற்காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி அழிந்திடாத வண்ணம் பாதுகாப்பதற்காக கேரள மாநிலத்தில் பிறந்த பாபநாச சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து சன்னியாசிகளால் இறையருளால் திறம்பட நடத்தப்பட்டு வருகிறது. இந்திய கலை மற்றும் கலாச்சாரம் உலகெங்கும் பரவச்செய்யும் பணியில் பாபநாசம் குடிசை ஆசிரமம் தனது பங்களிப்பை செய்து வருகிறது. கலையை வளர்க்க வேண்டும், பிறருக்கு அது தெரியவேண்டும் என்ற அடிப்படை கருத்தை கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான கதவு, ஜன்னல் மற்றும் சேர், அழகிய பொம்மைகள், பித்தளை விளக்குகள், பெயிண்டிங், சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு கலவையால் வீடு கட்டுவது உட்பட அனைத்து வேலைகளுமே இங்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. தொழில் நுட்பத்துடனும், கலை நயத்துடனும் தேக்கு, ஈட்டி போன்ற விலையுயர்ந்த மரங்களில் உலக சிறப்புமிக்க சிற்ப வேலைப்பாடுகள் செய்வதற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு செய்யப்படும் கதவுகளில் இணைப்பே தெரியாத அளவிற்கு நுணுக்கமாக செய்வதோடு பல்வேறு அழகிய டிசைன்களும் கதவுகளில் வடிவமைக்கப்படுகிறது. இதுதவிர துணிகளில் வரையப்படும் அழகிய வண்ணப்படம், மெட்டல் போன்றவற்றால் செய்யப்படும் அழகிய டிசைன்கள், எளிதாக மடக்கி எடுத்து செல்லக்கூடிய நாற்காலிகள் மற்றும் காண்டாமிருகம், யானை, புலி போன்ற மரக்கட்டைகளால் செய்யப்படும் பொம்மைகள், பல நூறு மரத்துண்டுகளை அதிலேயே அதாவது மரத்துண்டுகளிலேயே வண்ணங்களை வேறுபடுத்தி அழகாக ஒட்டி செய்யப்படும் பெரிய பெரிய வண்ணப்படங்கள் நெஞ்சை அள்ளும் வகையில் செய்யப்படுகிறது.

பார்ப்பதற்கு இது பெயிண்டிங் போல் காணப்பட்டாலும் மரத்துண்டுகளின் நிறத்தை வைத்து அழகாக ஒட்டப்பட்டுள்ள தோகை விரித்தாடும் மயில், பறக்கும் நிலையிலுள்ள கழுகு, தன்குஞ்சுகளோடு கூடிய கோழி என எண்ணற்ற வகைகளில் செய்து முடிக்கப்பட்டுள்ள அழகிய வண்ணப்படங்களெல்லாம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. பாபநாசம் குடிசை கலை மற்றும் கைவினைப் பயிற்சி மையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கலைப்பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.பாபநாசம் குடிசை ஆசிரமம் கலை மற்றும் கைவினை பயிற்சிக்கென தமிழகத்தில் இயங்கிவரும் ஒரு தொழிற்பயிற்சி மையமாகும். இந்த பயிற்சி மையத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பயிற்சி மையத்தில் பயிற்சியாளர்களுக்கு மரத்தில் சிற்பங்கள் செதுக்குதல், வெண்கலத்தில் கலை பொருட்கள் வார்ப்பு, உலோகத் தகடுகளில் கலை பொருட்கள் செய்தல், மரப்பொருட்கள் மீது உப்புத்தாள் தேய்த்து மெருகூட்டுதல், களிமண் மற்றும் வெள்ளை சிமென்டின் சுதை வேலை ஆகிய கலைப்பயிற்சிகள் இரண்டாண்டுகள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.சிறப்பு அம்சமாக பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாதம் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகையுடன் மேல்படிப்பிற்கும், அதன்பின் திறமையின் அடிப்படையில் 10 ஆயிரம் முதல் 18 ஆயிரத்திற்கும் மேலாக மாத ஊதியத்தில் பயிற்சி மையத்திலேயே வேலைவாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இலவசமாக தங்கி பயில விடுதி வசதியும் உள்ளது.இந்த பயிற்சிகளில் சேர்வதற்கு குறைந்தப்பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓவியம் வரைவதில் திறமையும், ஆர்வமும் உடையவராக இருக்க வேண்டும். வசதியில்லாத மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். மேலும் விபரங்கள் பெற தாளாளர், பாபநாசம் குடிசையின் கலை மற்றும் கைவினைப் பயிற்சி மையம், கீழாம்பூர் என்ற முகவரியில் (செல்:94421-17018) தொடர்பு கொள்ளலாம் என குடிசை ஆசிரமம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாபநாசம் குடிசையில் கலை வளர்கிறது என்பதைவிட கலை வாழ்கிறது என்றே சொல்லலாம்.
நன்றி : தினமலர்